வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

ஸ்ரீ ஸுப்ரமண்யர்

ஸ்ரீ ஸுப்ரமண்யர்



ஸுப்ரமண்யம் என்றால் நல்ல ப்ரஹ்மண்யன். ப்ரஹ்மண்யன் என்றால் வேதத்தை அனுசரிப்பவன். ப்ரஹ்மம் என்ற பதத்திற்கு வேதம் என்ற அர்த்தமும் உண்டு. வேத மந்திரத்தில் ஒரு குழந்தைக்கு தீட்சை கொடுப்பதால் அந்த நிகழ்ச்சிக்கு ப்ரஹ்மோபதேசம். எனவே அவன் ப்ரஹ்மச்சாரி ஆகிறான். வேதங்களின் பரம தாத்பர்யமான ப்ரஹ்மமாகிய பரமாத்மா ஸ்வரூபமாக இருப்பவர் ஸுப்ரமண்யர்.

வேதத்திற்கு முக்கியம் அக்னி உபாசனை. ஸுப்ரமண்யர் அக்னி ஸ்வரூபம். ஏனென்றால் பரமேஸ்வரரின் நேத்ராக்னியிலிருந்து தோன்றியவர்தான் ஸுப்ரமண்யர். வேதஸ்வரூபம். வேதம் படிப்பதும் சொல்லிக் கொடுப்பதும் தொழிலாக உள்ள ஷட்கர்ம நிரதராகிய ப்ராம்மணரின் தெய்வம் ஸுப்ரமண்யர். எனவே ஆசார்யாளும் ஸுப்ரமண்ய புஜங்கத்தில் “மஹீதேவ தேவம்” என்று கூறியிருக்கிறார். மஹீதேவர் என்றால் ப்ராம்மணர். அவர்கள் தெய்வம் (மஹீதேவ தேவம்) ஸுப்ரமண்யர்.

நக்கீரர் திருமுருகாற்றுப் படையில் ஒவ்வொரு முகமாக வர்ணிக்கும் பொழுது,

“ஒரு முகம் மந்திர விதியின் மரபுளி வழா அது அந்தணர் வேள்வியோர்க்கும்மே” என்று கூறுகிறார். எனவே ஸுப்ரமண்யர் வேதத்திற்கும் வைதீகத்திற்கும் அதிதேவதை.

ஸுப்ரமண்யர் மநஸிஜ கோடி கோடி லாவண்யர். மநஸிஜன் என்றால் மன்மதன். ஆகவே ஸுப்ரமண்யர் கோடி கோடி மன்மதர்களின் அழகு ஒருங்கே சேர்ந்த அழகைப் பெற்றவர்.

எந்த நேத்ராக்னியால் மன்மதனை பஸ்மம் செய்தாரோ அந்த நேத்ராக்னியிலிருந்து பிறந்தவர்தான் ஸுப்ரமண்யர்.

பிரம்ம ஸூத்ர பாஷ்யத்தில் பகவத்பாதாள் மூன்றாம் அத்யாயம் மூன்றாம் பாதத்தில் முப்பத்திரண்டாவது ஸூத்ரத்தில் பாஷ்யம் எழுதும்பொழுது பிரம்மாவின் மானஸ புத்ரராகிய ஸனத்குமாரர் கூட தானே ருத்ரனுக்கு வரம் கொடுத்துவிட்டு அதற்காக ஸ்கந்தனாகப் பிறப்பெடுத்தார் என்று கூறியுள்ளார். திரிபுர ரஹஸ்யத்தில் மஹாத்ம்ய காண்டத்தில் முப்பத்தேழாம் அத்யாயத்தில் இது கூறப்பட்டிருக்கிறது.

ஸனத்குமாரர் சுகாசாரியார் மாதிரி பிரம்மஞானி. அவர் தன் கனவில் தேவர்கள் மற்றும் அசுரர்களுக்கும் நடந்த சண்டையில் தான் தேவ சேனாபதியாக இருப்பதாகக் கனவு காண்கிறார். இந்தக் கனவைப் பற்றித் தன் தகப்பனார் பிரம்மாவிடம் கூற அவர் “ஒருநாள் நீ உண்மையாகவே தேவசேனாபதியாகி அசுரர்களை ஸம்ஹாரம் செய்யப் போகிறாய்.” என்று கூறுகிறார். மேலும் பிரம்மா கூறும்பொழுது, “இந்த ஜன்மாவில் நீ எல்லாம் ஒரே பிரம்மம் என்று நினைப்பதால் இன்னொரு ஜன்மாவில் இதைச் செய்வாய்.” என்று கூறுகிறார்.

ஒருவருக்கு வாக்கு, மனம், சரீரம் ஆகிய மூன்றும் ஒன்றாகிவிட்டால் அவருக்கு ஒரு சக்தி வந்து விடும். அவர் கனவில் நினைப்பவை கூட உண்மையாக நடந்துவிடும். ஸனத்குமாரர் பரப் பிரம்மத்தை தன்னில் தானாக அனுபவித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார். உலகமே ஒரு கனவு என்ற நிலையில் தான் கண்ட கனவைப்பற்றிச் சிந்திக்கவேயில்லை.

கனவில் கண்ட நிகழ்ச்சி பொய் ஆகிவிடக்கூடாதே என பரமேஸ்வரன் கவலைப்பட்டார். எனவே, தம்பதி ஸமேதராக பரமேஸ்வரன் அவர் முன் காட்சியளித்தார். எல்லாமே பிரம்மம் என்ற நிலையில் இருந்த ஸனத் குமாரருக்கு அவர்களை உபசரித்து பூஜை செய்ய வேண்டும் என்ற நினைப்பே ஏற்படவில்லை.

நீண்ட நேரம் நின்று பார்த்த பார்வதி பரமேச்வரர்கள் “ஞானி என்ற கர்வத்தினாலே உலகத்தின் தாய் தந்தையாகிய எங்களை அவமதித்துவிட்டாய். நாங்கள் சாபம் கொடுத்தால் என்ன செய்வாய்?” என்று ஸனத்குமாரரிடம் கேட்டார்கள். ஆனால் ஸனத்குமாரரோ “ருத்ரனாகிய நீ என்ன சாபம் கொடுத்தாலும் ஆத்மாவை பாதிக்காது” என பதில் கூறினார்.

இந்த பதிலால் மகிழ்ச்சி அடைந்த பார்வதி பரமேச்வரர் அவருடைய ஆத்ம ஞானத்தைப் பாராட்டி “உனக்கு என்ன வரம் வேண்டுமானாலும் தருகிறேன்.” என்று கூறினார்.

ஆனால் ஸனத்குமாரர் “எதை அடைந்தபின் வேறு எதையும் அடைய வேண்டியது இல்லையோ, வேறு எதையும் அடைய வேண்டிய ஆசையும் கூட இல்லாமல் நிறைந்த நிறைவாக இருக்கும் எனக்கு உம்முடைய வரத்தினால் எந்தப் பயனும் இல்லை.” என்று பதில் கூறினார். “அதுமட்டுமல்ல, உமக்கு ஏதாவது வரம் வேண்டுமானால் நான் தருகிறேன்.” என்றும் கூறினார்.

அதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த பரமேச்வரன் “மகாஞானியான நீ இந்த ஜன்மாவில் பிரம்மாவின் பிள்ளை. அவருக்குக் கிடைத்த இந்த பாக்யம் எனக்குக் கிடைக்க அடுத்த ஜன்மாவில் நீ எனக்கு மகனாகப் பிறக்கவேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

ஸனத்குமாரர் பதில் கூறும்பொழுது “உனக்குப் பிள்ளையாகப் பிறக்கிறேன்.” என்று வாக்கு கொடுத்தார். பார்வதி பரமேச்வரராக அவர்கள் காட்சியளித்தும் “உங்களுக்குப் பிள்ளையாகப் பிறக்கிறேன்.” என்று கூறாமல் பரமேச்வரனை மட்டும் நோக்கி “உனக்கு பிள்ளையாகப் பிறக்கிறேன்.” என்று கூறினார். இதைக் கேட்டதும் பார்வதிக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. பிரம்மஞானி மறுபடியும் பிறக்கிற போது அவர் நேராக தனக்கும் பிறக்க வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று.

சாஸ்திரங்களில் கணவன் எதைப் பிரார்த்தித்துக் கொண்டாலும் அது மனைவிக்கும் சேர்த்துத்தான் என்று கூறியிருக்கின்றன. எனவே மனைவி தனியாக வரம் கேட்கவேண்டும் என்றில்லை. கணவர் கேட்டதால் அது அவளுக்கும் சேர்த்துத்தான் என்பதால் மனைவிக்கும் புத்திரன்தான்.

ஆனால் ஸனத்குமாரராகிய பிரம்மஞானிக்கு கர்ப்பவாசத்தில் பிறக்க இஷ்டமில்லை. பிரம்மஞானியாகிய அவர் அதை அருவருப்பாகக் கருதினார். அப்படியே அவர் பார்வதி தேவியிடம் வேண்டினார்.

யார் தலையில் கை வைத்தாலும் அவன் பஸ்மம் ஆகிவிடுவான் என்ற வரத்தை பஸ்மாசுரன் பரமேச்வரரிடமிருந்து பெற்றிருந்தான். அதன்படி அதைப் பரிசோதிக்க அவன் பரமேச்வரன் தலையில் கைவைக்க முயன்றபோது அவர் மறைந்து விட்டார். அம்பாளும் சாதாரணப் பெண்போல் தன்னை மாற்றிக் கொண்டாள். பரமேஸ்வரன் மறைந்ததைக் கண்ட அவன் அப்படியே உருகி ஒரு பொய்கையாக (குளமாக) மாறிவிட்டான். பஸ்மாசுரன் மறைந்ததும் பரமேச்வரன் மீண்டும் தோன்ற பார்வதியும் தன் திவ்யதேகத்தை மீண்டும் எடுத்துக் கொண்டதுடன், தன்னுடைய பதிவிரதா தர்மத்துக்கு அடையாளமாக அந்தப் பொய்கை அப்படியே இருக்குமாறு அருள்புரிந்தாள்.

ஸனத்குமாரர் அடுத்த ஜன்மாவில் பரமேச்வரரின் தேஜஸாகப் பிறப்பதென்றும் பிறகு அம்பாள் அதை தன் சரீரமாகிய பொய்கையில் அதைத் தாங்குவது என்று முடிவு செய்தாள்.

பரமேச்வரன் தன் நெற்றிக் கண்ணிலிருந்து பொறிகளை வெளியிட்டவுடன் கங்கை பிரம்மாவின் உத்தரவின் பேரில் அந்தப் பொறிகளை அந்தப் பொய்கையில் சேர்த்த பிறகு சரவணப் பொய்கையான அதில் ஸுப்ரமண்யர் அவதரிக்தார்.

பிறகு அவர் தேவர்களுக்கெல்லாம் சேனாபதியாகி அசுரர்களை வெல்கிறார். ஸனத்குமாரரின் கனவின்படி அவரே இப்படி சரவணப் பொய்கையில் பிறந்து கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டு முன் ஜன்மத்தில் அவர் கண்ட கனவின்படி தேவ சேனாபதியாகி அசுரர்களை வெற்றி கொண்டார்.

ஸ்வாமி என்றால் எல்லாக் கடவுள் களையும் குறிக்கும் பொதுச்சொல் என்றாலும் அது குமாரஸ்வாமியாகிய ஸுப்ரமண்யரையே குறிக்கும். அமரகோசம் என்ற சம்ஸ்க்ருத அகராதியில் ஸ்வாமி என்பதற்கு, தேவஸேனாபதி:சூர:ஸ்வமீ:கஜமுகானுஜ என்றே கூறியிருக்கிறது. தேவர்களின் படைத்தலைவன்:சூரன்:ஸ்வாமி:யானை முகன் தம்பி என்று அர்த்தம்.

வால்மீகி இராமாயணத்திலும் பாலகாண்டம் 37ஆவது சர்கத்தில் விசுவாமித்திரர் இராம லக்ஷ்மணர்களுக்கு மேலே குறிப்பிட்ட ஸ்கந்த அவதாரக் கதையை விரிவாகக் கூறுகிறார்.

முடிவில் பலஸ்ருதியாக “குமார சம்பவக் கதையைச் சொன்னேன். இது தனத்தைக் கொடுக்கும். புண்யத்தைக் கொடுக்கும். காகுத்ஸ! இந்த உலகில் ஒருவன் கார்த்திகேயனிடம் பக்தி வைத்து விட்டால் போதும். தீர்க்காயுள், புத்திர பௌத்ர பாக்யம், எல்லாம் கிடைக்கும். முடிவில் அவன் ஸ்கந்த லோகத்திற்கு சென்று அங்கு நித்ய வாசம் செய்வான்” என்று கூறுகிறார்.

“ய இமம் ஸ்ஞணுயாத் ராம
கார்த்திகேயஸ்ய ஸம்பவம்
ஸர்வ பாப விநிர்முக்தோ
யாதி ப்ரஹ்ம ஸநாதனம்
பக்தஸ்ய ய: கார்த்திகேய
ககாகுத்ஸ்த புவி மானவ:
ஆயுஷ்மான் புத்ரபௌத்ரச்ச
ஸ்கந்தலோக்யமாப்னுயாத்”
(பாலகாண்டம் 37ஆவது சர்க்கம்)

குகன், ஸ்கந்தன், குமரன், ஆறுமுகன், மயில்வாஹனன், கார்த்திகேயன், சரவணபவன், ஸ்வாமிநாதன், சிவகுரு,தேவசேனாபதி என்றெல்லாம் அழைக்கப்படும், 1.ஈஸான முகம், 2.தத்புருஷமுகம், 3.அகோரமுகம், 4.வாமதேவமுகம், 5.ஸத்யோஜாதமுகம், 6.அதோமுகம் என்ற ஆறுமுகங்களைக் கொண்ட ஸுப்ரமண்ய ஸ்வாமியை வைகாசி விசாகத் திருநாளில் போற்றி வணங்குவோம்.

விநாயகர் - முழு முதற் கடவுள்

விநாயகர் - முழு முதற் கடவுள்


விக்னேஸ்வரர் - விக்னங்களை (தடைகளை) நீக்குபவர் நமது ஹிந்து தேசத்தில் அனைத்து மக்களாலும் போற்றப்படுபவர். நம் புராணங்களில் விநாயகர் யானை தலையும், மனித உடலும் கொண்டவராக சித்தரிக்கப்பட்டுள்ளார். ஒரு தந்தம் பாதி உடைந்ததாயும், பெரிய வயிற்றை உடையவராயும், ஒரு கால் மடக்கி அமர்ந்த நிலையிலும் உருவகப்படுத்தப்பட்டுள்ளார். அவரது காலடியில் பலவகையான உணவு வகைகள் பரப்பப்பட்டிருக்கும். ஒரு சுண்டெலி(மூஞ்சூறு) உணவின் இடையில் அவரை வேண்டி அமர்ந்திருக்கும். அவரது உருகத்தின் உள் அர்த்தங்கள் மிக ஆழமான ஆன்மிக தத்துவங்களை உள்ளடக்கியது.


ஆன்மிக கல்வியின் முதல் படி 'ச்ரவணம்' எனப்பெறும் வேதாந்த உண்மைகளைக் கேட்டல். இரண்டாவது படி, 'மனனம்' எனப்பெறும் கேட்ட வேதாந்த உண்மைகளின் சுய புரிதல்/தெளிதல். விநாயகரின் பெரிய காதுகள் மற்றும் பெரிய தலை அவரது ச்ரவணம் மற்றும் மனனம் குணங்களைக் குறிக்கின்றன.


அவரது முகத்திலிருந்து வெளிப்படும் துதிக்கை அறிவையும், அறிவால் வெளிப்படும் பகுத்தறியும் (திராவிட பகுத்தறிவு அல்ல) திறனையும் குறிக்கும். மனிதனின் அறிவு நமது வேதாந்தங்களின்படி இரு வகைப்படும் - பொது (புற) அறிவு மற்றும் உள் (அக) அறிவு. உலகப் பொருட்களின் எதிர்மறை வித்தியாசத்தை உணர்த்துவது பொது பகுத்தறிவு - எ.கா., இரவு-பகல், கருப்பு-வெள்ளை, சந்தோஷம்-வருத்தம் முதலியவற்றைப் பற்றிய அறிவு. உள் பகுத்தறிவு என்பது நிலையான உண்மை-மாயை, முடிவுள்ளது-முடிவற்றது, புறஉலகம் (terrestrial) (கண்ணுக்குத் தெரிவது) -ஆன்மிகஉலகம் (Transcendental - கண்ணுக்கு தெரியாதது) போன்ற உயரிய சிந்தனைகளப் பற்றிய அறிவாகும். விநாயகரின் துதிக்கை இந்த தத்துவத்தைக் குறிக்கும். யானைகளின் துதிக்கை மற்ற எல்லா உறுப்புகளைவிட சிறப்பானது. துதிக்கையினால் தரையில் இருக்கும் ஒரு குண்டுசியையும் எடுக்கமுடியும், மற்றும் பெரிய மரத்தையும் வேரோடு எடுக்க முடியும். இதைப்போன்ற எதிர் மறை செயல்கள் புரியக்கூடிய ஒரு கருவி இருப்பதரிது. விநாயகர் பெரிய மரம் போன்ற புற உலக அறிவையும், கண்ணுக்குப் புலப்படாத சிறிய ஊசி போன்ற அக அறிவையும் ஒருங்கே உணர்ந்தரிந்தவர் என்பதையே அவரது துதிக்கை குறிக்கிறது.


மனித பூரணத்துவம் உயர்ந்த தத்துவ அறிவைப் பெறுவதனாலேயே சாத்தியம். பூரணத்துவம் பெற்ற மனிதன் உலக எதிர்மறைகளால் பாதிக்கப்படுவதில்லை. சுகம்-துக்கம், விருப்பு-வெறுப்பு, குளிர்ச்சி-வெப்பம், மதிப்பு-அவமரியாதை போன்ற புற உலக எதிர்மறைகள் அவனை பாதிப்பதில்லை. சாதாரண மனிதன் உலகத்தின் இத்தகைய எதிர்மறைகளுக்கிடையே அல்லாடிக்கொண்டிருக்கிறான். இந்த விஷயத்தையே விநாயகரின் இரு தந்தங்களும் உருவகப் படுத்துகின்றன. அவற்றில் ஒன்று உடைந்திருப்பது உலக எதிர்மறைகளை உடைத்தெரியத் தயங்கக்கூடாது என்பதை உணர்த்துவதற்கே. புற உலகில் தந்தங்கள் மதிப்பு மிக்கவையாகக் கருதப்படுகின்றன. ஆனால் உண்மையான அறிவு ஏற்பட இந்த உலக பொருட்களைப் பற்றிய பற்றுதலை (அதுவும் நாமே) உடைத்தெறிய வேண்டும் என்பதைக் காண்பிப்பதற்கே ஒரு தந்தத்தை தானே உடைத்து கையில் வைத்திருப்பதாக விநாயகர் உருவகப்படுத்தப் பட்டுள்ளார்.


விநாயகருடைய பெரிய பானை வயிறு குறிப்பது யாதெனில் பூரணத்துவம் பெற்ற மனிதன் எத்தகைய விஷயத்தையும், அனுபவத்தையும் உட்கொண்டு சீரணித்த பின்னும், நிலையான சிந்தனையுடன் இருக்க முடியும் என்பதையே. எத்தகைய சோதனைகளையும், பிறப்பு-இறப்பு அனுபவங்களையும் ஒருவனால் ஒரே மாதிரி சீரணிக்கமுடியவேண்டும் என்ற உயர்ந்த தத்துவத்தை உருவகப்படுத்துவது விநாயகரின் பானை வயிறு.


குபேரன் ஒருமுறை ஒரு பிரம்மாண்டமான விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தான். விநாயகப் பெருமான், விருந்திற்குப் படைக்கப் பெற்ற அனைத்து உணவுப் பண்டங்களையும் உண்டு விட்டு பசியடங்காமல் தவித்தார். சிவபெருமான் தோன்றி ஒரு கையளவு வருத்த அரிசியை வழங்கினார் - அதனை உண்டவுடன் விநாயகரின் பசியாறியது. இந்தக் கதை விளக்கும் தத்துவம் - மனிதன் குபேர சம்பத்துகளால் ஒருபோதும் திருப்தி அடைய இயலாது. பொருட்களின் பின்னால் உள்ள ஆசை ஒரு போதும் திருப்தியையோ, அமைதியையோ தரவியலாது. உண்மையான தத்துவத்தினை அறிய ஒரே வழி 'வாஸனை' எனப்படு தன் ஆசைகளை ஒருவன் கொன்று தின்பதே. அரிசி வருக்கப்படும் போது தன்னுடைய 'உயிர்த்' தன்மையை இழக்கிறது. அதனால் மறுபடியும் முளைவிட இயலாது. ஆசைகளைக் கொல்வதே வருத்த அரிசியின் உட்கொண்டதன் மூலம் உருவகப் படுத்தப்பட்டிருக்கிறது. விநாயகரது இடக்கையிலிருக்கும் வருத்த அரிசி உணர்த்தும் தத்துவம் இதுவே.


விநாயகர் ஒரு காலை மடக்கியும், மற்றொரு காலை பூமியில் பதித்தும் அமர்ந்த நிலையில் காண்பிக்கப்படுகிறார். இது ஒரு மனிதன் பூமியிலிருக்கும் போது மற்றெந்த மனிதனைப் போல் வாழ்வதையும், அவனுடைய மனம் மட்டுமே உள் திரும்பி ஆத்மாவில் லயித்திருப்பதையும் காண்பிக்கிறது.


விநாயகரின் காலடியில் பரப்பி வைக்கப்பெற்றுள்ள உணவு வகைகள் உலக இன்பங்களையும், செல்வத்தினையும் குறிக்கிறது. மேற்கூரிய வகைககளில் வாழும் ஒருவனின் காலடியில் உலக செல்வங்களனைத்தும் குவிந்து கொடுக்கும் என்னும் தத்துவத்தினை உணர்த்துவது இது. அவனுக்கு இச்செல்வங்கள் ஒரு பொருட்டேயில்லையெனினும், அவை அனைத்தும் அவன் காலடியில் அடிமையாகக் கிடக்கும்.


உணவுப் பண்டங்களுக்கிடையே ஒரு மூஞ்சூறு உணவினைத் தொடாமல் விநாயரின் அனுமதி வேண்டி நின்றிருக்கும். மூஞ்சூறு (எலி) ஆசைகளை உருவகப்படுத்துகிறது. எலிக்கு சிறிய வாய் மற்றும் கூரிய பற்கள் உண்டு. ஆனால் எலி மிகுந்த பேராசை கொண்டது. அதனுடைய ஆசை எவ்வளவு பெரியது என்றால் எப்போதுமே தனது தேவைக்கு மேலேயே உணவினைச் சேர்த்து வைக்கும் - பலமுறை எந்த இடத்தினில் சேர்த்தோம் என்ற அறிவின்றி பல வளைகளிலும் உணவினைச் சேர்த்து வைக்கும். எலிகள் பேராசையின் மொத்த உருவம். இத்தகைய குணம் உள்ள எலி பரப்பி வைக்கப்பெற்றுள்ள உணவுப் பொருட்களின் மத்தியிலிருந்தும், அவற்றினைத் தொடாமல் விநாயகரின் அனுமதி வேண்டி அமர்ந்திருக்கிறது. இது உணர்த்துவது யாதெனில், பூரணத்துவம் பெற்ற மனிதன் தன் ஆசைகளின் மேல் முழுமையான் ஆளுமை உடையவனாக இருப்பான். உலகச் சபலங்கள் அவனை எதுவும் செய்ய முடியாது. இத்தகையவனுடைய செயல் பாடுகள், அவனுடைய தெளிந்த சிந்தனையின் பால் நடக்குமே தவிர, உணர்ச்சிகளால் உந்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்படமாட்டா.


ஒரு புராணக் கதையின் படி சந்திரன் ஒருமுறை பெருத்த உருவமுடைய விநாயகர், சிறிய மூஞ்சூறுவின் மீது பயணம் செய்ததைப் பார்த்து சிரித்தது. இந்த குற்றத்தினால் விநாயக சதுர்த்தியன்று சந்திரனைப் பார்ப்பது தவறு என்பது ஹிந்து மக்களின் ஒரு நம்பிக்கை. விநாயகர், மூஞ்சுறுவின் மேல் சவாரி செய்வதன் உள் அர்த்தம் யாதெனில், பூரணத்துவம் பெற்ற மனிதன் தன்னுடைய உடல், உலக அறிவு, மற்றும் மனதின் மூலம் அறியமுடியா பேருண்மையை உணர்த்த முயற்சிப்பதுவே. உடல், மனம் மற்றும் உலக அறிவு என்பவை முடிவுள்ளவை. இவற்றின் மூலம் 'ஆன்மா' வின் பேருண்மையை விளக்க இயலாது. சந்திரன் மனதின் கடவுள். சாதாரண மனம் கொண்ட மனிதனால் பேருண்மையினை உணர முடிவதில்லை. அந்த அறியாமையினாலேயே அவன் பூரணத்துவம் பெற்றவர்கள், மற்றும் அவர்களது செய்கைகள், நூல்கள் ஆகியவற்றைப் பார்த்து கேலியும், கிண்டலும் செய்கிறான். இத்தகைய மகான்களைப் பார்த்து கேலி செய்பவர்கள் சந்திரனைப் போலவே நிலையற்ற தன்மை பெற்று வருந்துவார்கள் என்பதனையே விநாயகரின் மூஷிக வாகனப் பயணம் உணர்த்துகிறது.


விநாயகருக்கு நான்கு கரங்கள் உண்டு. இவை மனிதனின் உள் சக்திகளான 'மனஸ்' (மனது), 'புத்தி' (அறிவு), 'அஹங்காரம்' (அகந்தை) மற்றும் 'சித்' (பேரறிவு, மெஞ்ஞான சிந்தனை) என்பனவற்றைக் குறிக்கும். ஒரு கையில் கோடரியும், ஒரு கையில் கயிற்றையும், ஒரு கையில் வருத்த அரிசி உருண்டையையும் (மோதகம்) , நான்காவது கையினில் தாமரைப் பூவையும் கொண்டிருக்கிறார். கோடரி உலகப் பற்றினையும், ஆசைகளையும் அவற்றினால் விளையும் கோப, தாபங்களையும் வெட்டி விட வேண்டும் என்பதனை குறிக்கிறது. கயிறானது உலக பந்தங்களில் இருந்து ஒருவனை விடுவித்து நிலையான உண்மையான தன்னை உணர்தல் எனும் உணர்விற்கு கட்டிப் போடுவதை (பிணைப்பதை) உணர்த்துகிறது. மோதகம் தேடுதலுடைய ஒருவன் அடையப் போகும் நிலையான இன்பத்தைக் குறிக்கிறது. தாமரை பூ மனித பரிணாமவளர்ச்சியின் உயர்ந்த குறிக்கோளினைக் குறிக்கும்.


ஒவ்வொரு முறை விநாயகப் பெருமானை வணங்கும் போதும், அவரது உருவ அமைப்பு விளக்கும் இத்தகைய உயர்ந்த தத்துவங்களை மனதினிருத்திப் ப்ரார்த்திப்பது நம் அனைவருக்கும் கைவரப்பெற முழுமுதற் கடவுளான விநாயகனைப் வேண்டுகிறேன்.